Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Friday, May 3, 2019

கண்டனென் கற்பினுக்கு அணியை !!!

கண்டனென் கற்பினுக்கு அணியை

Effective communication – Email Etiquettes – short and simple – 7 C’s of communication etc. We have come across a lot of “communication” topics. 


The essence is “Tell what you want to say in the first 2 lines. Detailed explanation can follow then!!!”.
One such beautiful, clear, concise verse in “Kambaramayanam” – Thamizh Epic (Written by Thamizh poet Kamban, 12th century) never fails to mesmerize.


சீதையைத் தேடிச் செல்கிறான் அனுமான். இராமனோ இங்கு பதட்டத்தில். பல காத தூரம் சென்று, வென்று வரும் அனுமான். இங்கு இல்லாளைப் பிரிந்து தவிக்கும் இராமன் !


[Hanuman has gone in search of Sita. Anxious Rama waits for Hanuman’s arrival, with a good news about Sita. Hanuman reaches Lanka, finds Sita. He reaches back to the restless Rama.]


வழக்கம் போல இராமனை வணங்கி, பாதம் பற்றி, ஆலிங்கனம் செய்து, "நான் இங்கிருந்து புறப்பட்டேனா? ... சென்று கொண்டே இருந்தேன் !!!", என கதையளந்திருக்கலாம். ஆனால் அனுமன் என்ன செய்தான்? சமுத்திரத்தை நோக்கி, தென் திசை பார்த்து வணங்குகிறான். இராமனுக்கு பாதி துயரம் குறைந்தது. அனுமன் சீதை இருக்குமிடம் அறிந்தான் எனக் கண்டு கொண்டான். சீதை நலமோடு உள்ளாள் - இராமன் ஐயம் தீர்ந்தது.


[As a practice, Hanuman could have conveyed his wish to Rama and then he could have started, “I started from here, and do you know what happened on the way? Etc.” But he did not. He turned towards the ocean at the South, raised his hands and paid his salutation. Rama got rid of his major reason for worrying. “Sita is alive and fine. Path to her existence is this ocean”.]


எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கை கொடு
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.



விளக்கங்கள் கேட்டு இராமன் வாய் திறக்கும் முன் அனுமன் உரைக்கிறான்.


[Before Rama asks any question, Hanuman tells,]


“கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.”



"நான் கண்களால் கண்டேன். கற்பினுக்குப் பெருமை சேர்க்கும் அணியை! இலங்கை மாநகரில். கவலை களையுங்கள்!".


[I met Sita. She is alive, with her chastity not disturbed. And she is in Lanka which is surrounded by the ocean.]


அனுமன் "சொல்லின் செல்வன்" அல்லவா !!!


[No wonder Hanuman is praised as “Sollin Selvan” – meaning, the one with a wealth of words. ]
 

Thursday, September 13, 2018

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!

இன்று விநாயகர் சதுர்த்தி - மூலாதாரக் கடவுள் விநாயகர் பிறந்ததை சிறப்பிக்கும் பண்டிகை.

மற்ற எந்தக் கடவுளுக்குமில்லாமல், விநாயகருக்கு ஏன் இந்தத் தனிச் சிறப்பு?

விநாயகரின் உருவம் ஏன் இப்படி உள்ளது?

நமது இந்து மதத்தில் பல கடவுளின் உருவங்கள் வழிபாட்டுக்கு இருக்க, ஏன் கணேசனுக்குத் தனிப் பெருமை?

இந்தக் கேள்விகள் எழுந்துள்ளதா என்றாவது?
சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

பிள்ளையாரின் வரலாறு தான் என்ன?

அம்மை பார்வதி, தான் குளிக்கையில் தனது வியர்வையால், ஒரு மகனை உருவாக்குகிறாள். அவனைக் காவலுக்கு இருத்துகிறாள். பார்வதியைத் தேடி சிவபெருமான் வருகையில், இம்மகன் உள்ளே செல்லவிடாமல் தடுக்கிறான். சிவன் அவனது தலையைக் கொய்கிறார். பின்பு, சாந்தமடைந்து, யானைத் தலையை வரமளிக்கிறார்.

இதுவே நம் புராணங்களின் கதை. அவ்வளவுதானா
அதெப்படி வியர்வையினால் மகனை உருவாக்க முடியும்? சிவபெருமான் கடவுள் அல்லவா? பிறகு ஏன் மகனின் தலை கொய்தார்
அவர் நினைத்தால், மறுபடியும் பழைய தலையையே அளித்திருக்க முடியுமே !! ஏன் யானையின் தலை? ஒரு சிறுவன் அவ்வளவு பெரிய யானைத் தலையை வைத்துக் கொண்டு என்ன செய்வான்?

இந்தக் கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கிறதா
ஏன் இவ்வாறு ஒரு விடயம் கூறப்பட்டது என ஆராய்ந்ததுண்டா?

நமது புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் எழுதப்பட்டதன் நோக்கம் ஒன்றே. 'நான்' என்பதறிதல்.
"பன்றிக்கு முன் முத்துக்களை இறைக்காதீர்கள்" என்றொரு பழமொழி உண்டு. அதன்படி, உள்ளர்த்தம் நிரம்ப நிரம்ப கதைகள் ஆயிரக்கணக்கில் நமக்குத் தரப்பட்டன. உள்ளர்த்தத்தின் தேடல் இருப்பவர்களுக்கு இவை பொக்கிஷம். மற்றவருக்கு, வெறும் கதைகள்.

சிவன் என்பது தெய்வீக ஆற்றலைக் குறிக்கும் ஒளி. (தீமைகளை) அழிக்கும் கடவுள். ஓர் உயிருக்கு, ஆன்மீக ஒளி நல்கி நல்வழிப்படுத்துவது சிவனின் சக்தி. உடலைக் குறிப்பது அம்மை பார்வதி. ஓர் உடலில், தெய்வீக ஒளி இறங்குகையிலேயே அவ்வுடல் சுத்தமாகிறது. இப்பிறப்பின் நோக்கங்கள் அறிகிறது.
சிவனின் துணையின்றி, பார்வதி(உடல்) உருவாக்கியது பிள்ளையார். ஆகவே, பிள்ளையார் தெய்வீக ஒளி துளியும் இல்லாத உடலின் உருவகம். இந்த உடலைப் புனிதப்படுத்த தெய்வீக சக்தியானது அவசியம். சிவன் வருகையில், அதாவது, தெய்வீக சக்தி உள்நுழைகையில், இந்த உருவகமானது அதனைத் தடுக்கிறது. தடுக்கின்றவற்றை, தவறானவற்றை அழிப்பதற்குத் தானே சிவ பெருமான்? தலை துண்டிப்பு என்ற தண்டனை. அறியாமைத் தலைக்கேற இருப்பதை சுத்தம் செய்யும் வழி.

ஆக, தெய்வீக சக்தி உள்நுழைந்தாயிற்று. பிறவிப் பயன் அடைந்தாயிற்று. ஆனால் ஏன் யானைத் தலை தரப்பட்டது?
பண்டைய புராணங்களில், மூலாதாரச் சக்கரத்திற்கு யானையே சின்னம். ஆன்மீக அனுபவமடைந்து, சமாதி நிலை அடைய, யோகிகள் கூறுவது, குண்டலினி எழுப்புதல். குண்டலினி சக்தியானது இருக்குமிடம் மூலாதாரம். தலைக்குள் நுழையும் தெய்வீக சக்தி, மூலாதாரத்தை அடைந்து, குண்டலினியை மேலெழுப்ப, அம்மனிதன் மிகுந்த திறமை வாய்ந்த, புத்திக்கூர்மையுடைய, வெற்றி காணும் மனிதனாகிறான். மூலாதாரம் மூலமாக, குண்டலினி எழுப்பிச் சிறந்ததால், யானைத் தலை அளித்ததாக நமக்குச் சொல்லப்பட்டது.

குண்டலினி அனைத்து உருவங்களிலுமே பாம்பு வடிவில் குறிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக முதிர்ச்சியடைந்தவர்கள் எழுப்பப்பட்ட குண்டலினியை நாபியில் சேமிக்கிறார்கள் - விநாயகரின் பெரிய வயிறு(அதிக தெய்வீக சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ளது), அதனைச் சுற்றியுள்ள பாம்பு(குண்டலினி சக்தி).

ஓர் உடைந்த தந்தம் - யானைத் தலையுடன், மிக வலிமையான, சிறந்த படைப்பாகத் தான் இருந்தாலும், அகங்காரத்தினால், மற்றவருக்குத் தீங்கு இழைக்காமல் இருக்க வேண்டுமென்ற குணத்தைக் கூறுகிறது.

இதனை அடித்தளமாகக் கொண்டு, மற்ற வினாக்களுக்கு விடை தேடுங்கள். தேடுபவருக்கே நல்முத்துக்கள் கிடைக்கும் !

இதே கருத்துக் கூற முயற்சிக்கும் என் மற்ற பதிவுகள்



தேடல் செய்யத் தூண்டியது - பிராணசிகிச்சை வகுப்புகள் (GMCKS Pranic Healing Classes), முக்கியமாக, “Inner Teachings of Hinduism Revealed” என்ற வகுப்பு.


Sunday, June 10, 2018

காலா - கரிகாலன் !!! - Kaala Review in Tamil



காலா - கரிகாலன் !!!


இராமாயணம் - இராமன் இராவணன் யுத்தமே அதன் பிரதானம். சீதையை இராவணன் கடத்திச் செல்ல, இராமன் மீட்டு, அக்னிப்பிரவேசம் அளிக்கிறார். பின்பு முடிவில்லா வனவாசம். இராமபிரான் கடவுள் ஒளியின் வடிவம். இராவணன் நம்முளிருக்கும் தீய குணங்களின் வடிவம். எவ்வளவு சக்தி இருப்பினும், இறைவனை அறிய மறுக்கும் குணத்தின் உருவகம்.

மணிரத்னத்தின் இராவணன் - இதில் இராவணன் நாயகனாகிறான். சீதையைக் கவர்ந்து வர,இராமன் தேடத் தேட, பட இறுதியில், இராமன் முழுதும் நல்லவனல்ல எனப் புரிகிறது சீதைக்கு. இராமனாக இருந்தால் மட்டுமே, அவனால் இராவணன் அழிய வேண்டுமென்பதில்லை அனைத்து நிகழ்வுகளிலும்!!!

காலா எனத் தலைப்பிட்டுவிட்டு, இராமாயணம், இராவணன் என எழுதுகிறேனென்று பார்க்கிறீர்களா!!! இதுவும் இராமாயணத்தின், இராவணின் ரீமேக் தான். மேலும், இப்பொது படம் ஓட எதெல்லாம் ட்ரெண்டிங் ??? சாதி அடக்குமுறை, அரசியல், ஊழல், ஜல்லிக்கட்டுப் போராட்டம், பெண்ணியம். இவை அனைத்தையும் கலந்து, தலைவரின் நடிப்பில் மிளிர்கிறது.

இராமனாக நானா படேகர் - ஹரி தாதா வை உருவகம் செய்கிறார்கள். பெயர் ஹரி. மும்பையில் எங்கு பார்த்தாலும் அவர் படம் தான்(God is omnipresent). புனிதத்தின் அடையாளமாக வெள்ளை உடை. வீட்டில் இராமாயண பஜனை. கட்டிட நிறுவனத்தின் பெயர் "மனு". "ஏன் இராமன் இராவணனைக் கொல்ல வேண்டும்?" என்ற கேள்விக்கு, "வான்மீகி எழுதிட்டாரே!! அப்பக் கொன்னு தான ஆகனும்??" என்ற பதிலிலேயே படம் புரிந்துவிடுகிறது.

சுத்தமான மும்பை என வாக்கு அளித்தாலும், உயர்ந்த இடத்தில் கடவுள் போல வாழ்ந்தாலும், மக்களைக் காக்க மறுத்தால், இராமனும் தண்டிக்கப்படவேண்டியவனே என்ற கருத்தை ஒவ்வொரு இடத்திலும் வலியுறுத்துகின்றனர்.

இராவணன் - காலா என்ற கரிகாலன்.  காலா என்றால், தமிழில் காப்பவன் என்கிறார்கள். மற்றோர் பொருள் எமன் - காலன். தன் மக்களுக்காகப் போராடும் இராவணன். காலாவுக்கு 4 மகன்கள். வத்திக்குச்சி திலீபன் மூத்த மகனாக, பலம் பொருந்தியவனாக, காலாவிற்குக் காவலாக. இந்திரஜித்தின் உருவகம்.

அப்போ சீதை? இரண்டு கதைகள் இருப்பதாகத் தோன்றியது எனக்கு.

சீதை - சரீனா:


இராவணன் ஆசைப்பட்டு, அடைய முடியாமல் போன காதலி சரீனா. அவர்களிருவரையும் நெருப்புப் பிரிக்கின்றது இருமுறை. இக்கதையில், சரீனாவும் காலாவைக் காதலிக்கிறாள். தனியாளாக, மகளை வளர்க்கிறாள்(சீதை லவகுச வனவாசம் போல்). ஹரிதாதா சரீனாமேல் ஆசை கொள்ளவில்லை. மாறாக, இகழ்கிறான். இஸ்லாமியப் பெயரை உச்சரிக்கும் போது காது கேட்காதது போல் நடிப்பது, காலில் விழக்கூறுவது, என மதவெறி கொண்டவன். இராவணனோ, அதாவது காலாவோ, மனைவிக்குத் துரோகமிழைக்காத நல்லவன்.
சரீனா ஆரம்பத்தில், மனுவின், தாராவி சீரமைப்புத் திட்டத்தை ஆதரிக்கிறாள். பின்பு, மேற்சொன்ன காட்சிக்கடுத்து, காலாவின் ஆதரவாளராகிறாள்.

சீதை - தாராவி:


பூமாதேவியே சீதை. சீதையாக தாராவி. தாராவிக்காகவே ஹரிதாதா, காலா யுத்தம்.

வத்திக்குச்சி திலீபன் - காலாவின் மகன் செல்வமாக மிரட்டுகிறார். வாழ்வுதான்.

ஈஸ்வரி ராவ் - காலாவின் மனைவியாக ரசித்து ரசித்து நடித்திருக்கிறார். திருநெல்வேலி மணம் செம. எல்லாக் காரியங்களிலும் காலாவிற்குத் துணையாக இருப்பதில், சரீனா வந்ததும், கணவர் அவளிடம் பேச தனிமை ஏற்படுத்திக் கொடுப்பதில், மகன்களை விட கணவனை நேசிப்பதிலும் - ரஞ்சித்தின் தேர்வு அற்புதம்.

மணிகண்டன் - காலாவில் கடைப்புதல்வன் லெனின். போராடி வெல்லவேண்டும், வன்முறை, விதிமீறலாகாது என நம்பி, காலாவை அசுர குலத் தலைவன் என அழைக்கும் பாச மகன். தந்தைக்கும் மகனுக்கும் தாராவியின் நலன் முக்கியம். வெவ்வேறு எண்ணங்களிருப்பினும், அந்த பிணைப்பு - துடிப்பான நடிப்பில் கவர்கிறார்.

புயல் சாருமதி - படத்தில் துவக்கத்திலிருந்து, யாரிந்தப் பெண் என புருவம் உயர்த்த வைக்கிறார். லெனினின் காதலியாக, தாராவியின் நலனிற்காக லெனினையும் எதிர்க்கும் பெண்ணாக, அற்புதம்.

ஹூமா குரேஷி - சரீனா. காலாவின் முன்னாள் காதலி. தேர்ந்த நடிப்பு.

நானா படேகர் - வழக்கமான வில்லன். பெரிதாகச் சொல்வதற்கொன்றும் தோன்றவில்லை.

சமுத்திரக்கனி - வாலியப்பன். காலாவின் உயிர்நாடியாக இருக்கும் நண்பன். எப்போதும் போதையில் இருந்து கொண்டே பன்ச் டயலாக்குகள் பேசுவதிலிருந்து, கடைசி வரை உடல் மொழியில் மிரட்டுகிறார்.

மேலும் பல கதாப்பாத்திரங்கள். நேர்த்தியான தேர்வு அனைத்திற்கும்.

கபாலியின் குமுதவல்லி, யோகி போல, இதில் செல்வி, சரீனா, சாருமதி. ரஞ்சித்தின் பெண்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்

செல்வியிடம் குமுதவல்லியின் சாயல். சரீனாவைப் பார்த்துவிட்டு வரும் காலாவிடம், தன் பள்ளிப் பருவத்துக் காதலனைப் பார்க்கக் கிளம்புவதாகக் கூறுவது, மகனை வெளியேற்றும் காலாவை அதட்டிவிட்டு, "போய் நல்ல இடமா இருடா" என்று சொல்லிவிட்டு வருவது.. கலக்கல்.

சரீனா காலாவின் முன்னாள் காதலியாக, தாராவிக்காக போராடும் போராளியாக, காலாவை எதிர்த்துப் பேசும் துணிச்சலான பெண்ணாக, அதே சமயம், காலாவின் உற்ற தோழியாக, ஹரி தாதாவின் காலைப் பிடிக்க வைத்ததும் வெறி கொண்டவளாக  வெளியே வரும் போதும், கண்களிலேயே பேசிவிடுகிறார்.

சாருமதி, முதல் காட்சியிலேயே எட்டி உதைப்பதாகட்டும், "எப்படி மரியாத குடுப்பது? குனிஞ்ச தல நிமிராம வரணுமா?" என நேரடியாக கேட்பதாகட்டும், எடுத்ததுமே மனதில் ஒட்டிக் கொள்கிறார். காவலர்கள் துகிலுரிக்க, தவழ்ந்து செல்லும் புயல், துணிக்கு பதிலாக அருகிலிருக்கும் இரும்புக் கம்பியை எடுத்துத் தாக்க, புரட்சிப் பெண்ணாக எழுகிறாள்.

மகன் இறந்த பின்பும், உரிமைக்காகவே குரல் கொடுக்கும் தாய்,"எங்க சுடு பாக்கலாம்" என முன்னால் வரும் பெண்கள் என வழக்கமாக ரஜினி படப் பெண்களைக் கடந்த இரு படங்களிலும் மாற்றியிருக்கும் ரஞ்திற்கு நன்றிகள்.

படத்தின் கிளைமாக்ஸ் தான் முக்கியமே.இராவணவதத்திற்குப் பின் சீதைக்கு அக்னிப் பரீட்சை அளிக்கிறான் இராமன். இங்கு, இராவணன் அக்னியில் கலக்கிறான். வெற்றியுடன் வரும் ஹரி தாதா எங்கு கண்டாலும், காலாவின் முகமே தெரிகிறது. வெள்ளையில், கருப்பு வண்ணம் வீசப்படுகிறது. கருப்பு வண்ணமில்லை. ஆனால் கருப்பில்லாமல் எந்த வண்ணங்களுமில்லை. உழைப்பின் நிறம் கருப்பு. அதனை மறுப்பது எந்த மாயாஜால வண்ணமாக இருப்பினும், அதில் கருப்பு உண்டு.சிவப்பு, நீலம் என வண்ணக் கலவைகள் கருப்புக்கு அடுத்த படியாக தெறித்து எழ, இராமவதம் நடக்கிறது.
"நான் ஒருத்தன் செத்தா என்ன? இங்க இருக்க எல்லாரும் காலா தான்" - நம்மைக் காக்கத் தனியாக யாரும் இருப்பதை விட, மாற்றம் நம் ஒவ்வொருத்தரிடமும் ஆரம்பிக்க வேண்டுமென அழுத்தமாக பிதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

இசை - பாடல்கள், பிண்ணனி இசை எதுவுமே மனதில் ஒட்டவில்லை(ஒன்றைத் தவிர). எந்தக் காட்சியிலும், பிண்ணனி இசை உணர்வுகளைத் தூண்டவில்லை. செல்வி இறக்கும் காட்சிகளில் கூட பிண்ணனி இசை எந்தவொரு உணர்ச்சியும் வெளிக்கொணரவில்லை.

அடுத்து?

தலைவர் - என்ன சொல்லவென்று தெரியவில்லை. நடிப்பின் மன்னன். அவர் இல்லாவிடில், இப்படம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருப்பு போல் காலா. பழைய ரஜினி வந்தாயிற்று. அந்த முகத்தில் தான் எத்தனை பாவங்கள்? இதற்குமேல் நான் எதுவும் கூறப்போவதில்லை. தலைவரின் நடிப்பு, பார்த்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. வார்த்தைகளால் விளக்க முடியாது.

இராமாயணம் ரீமேக் - பல பேர் பரீட்சித்துவிட்டார்கள். தாராவி -- அதெல்லாம் நாயகன் படத்திலேயே பார்த்தாயிற்று. போராட்டக் காட்சிகள் - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அப்படியேக் காண்பித்தாயிற்று.புதிதாக ஏதுமில்லையெனினும், நம்மைக் கட்டிப்போடுவது ரஜினி மட்டுமே.


கபாலியில் My Father Baliah. இதில் காலா மேசையில் "இராவண காவியம்" புத்தகம். அதுவும் 'க்யா ரே செட்டிங்கா" சண்டைக் காட்சிக்குப் பின். சரீனா வருகையில் தலைவர் படிக்கும் புத்தகத்தைச் சரியாக பார்க்கவில்லை. இறுதியில் ஒரு போர்டு.. "Singara chennai is no more a dream.. H. Jara".:-)

இப்படி, படத்தில் ஏகப்பட்ட நுணுக்கமான காட்சிகள் உள்ளனஎன் சிற்றறிவிற்கு எட்டியவை இவ்வளவே.மேலும் தோணபதிவிடுகிறேன்.

காலா - ரஜினி மற்றும் கடைசி 20 நிமிடங்களுக்காக!!!


ஆனால் காலாவா கபாலியா என்று கேட்டால், கண்டிப்பாக கபாலி தான் !!!!

Monday, May 7, 2018

அன்புள்ள உயிரே !!!


"பிரதிலிபி" கடிதம் எழுதும் போட்டிக்காக எழுதிய கடிதம்.

பிறக்கவிருக்கும் மகனிற்காக, அன்னை எழுதும் மடல் !!!

இங்கே சொடுக்கவும்.