Sunday, June 10, 2018

காலா - கரிகாலன் !!! - Kaala Review in Tamil



காலா - கரிகாலன் !!!


இராமாயணம் - இராமன் இராவணன் யுத்தமே அதன் பிரதானம். சீதையை இராவணன் கடத்திச் செல்ல, இராமன் மீட்டு, அக்னிப்பிரவேசம் அளிக்கிறார். பின்பு முடிவில்லா வனவாசம். இராமபிரான் கடவுள் ஒளியின் வடிவம். இராவணன் நம்முளிருக்கும் தீய குணங்களின் வடிவம். எவ்வளவு சக்தி இருப்பினும், இறைவனை அறிய மறுக்கும் குணத்தின் உருவகம்.

மணிரத்னத்தின் இராவணன் - இதில் இராவணன் நாயகனாகிறான். சீதையைக் கவர்ந்து வர,இராமன் தேடத் தேட, பட இறுதியில், இராமன் முழுதும் நல்லவனல்ல எனப் புரிகிறது சீதைக்கு. இராமனாக இருந்தால் மட்டுமே, அவனால் இராவணன் அழிய வேண்டுமென்பதில்லை அனைத்து நிகழ்வுகளிலும்!!!

காலா எனத் தலைப்பிட்டுவிட்டு, இராமாயணம், இராவணன் என எழுதுகிறேனென்று பார்க்கிறீர்களா!!! இதுவும் இராமாயணத்தின், இராவணின் ரீமேக் தான். மேலும், இப்பொது படம் ஓட எதெல்லாம் ட்ரெண்டிங் ??? சாதி அடக்குமுறை, அரசியல், ஊழல், ஜல்லிக்கட்டுப் போராட்டம், பெண்ணியம். இவை அனைத்தையும் கலந்து, தலைவரின் நடிப்பில் மிளிர்கிறது.

இராமனாக நானா படேகர் - ஹரி தாதா வை உருவகம் செய்கிறார்கள். பெயர் ஹரி. மும்பையில் எங்கு பார்த்தாலும் அவர் படம் தான்(God is omnipresent). புனிதத்தின் அடையாளமாக வெள்ளை உடை. வீட்டில் இராமாயண பஜனை. கட்டிட நிறுவனத்தின் பெயர் "மனு". "ஏன் இராமன் இராவணனைக் கொல்ல வேண்டும்?" என்ற கேள்விக்கு, "வான்மீகி எழுதிட்டாரே!! அப்பக் கொன்னு தான ஆகனும்??" என்ற பதிலிலேயே படம் புரிந்துவிடுகிறது.

சுத்தமான மும்பை என வாக்கு அளித்தாலும், உயர்ந்த இடத்தில் கடவுள் போல வாழ்ந்தாலும், மக்களைக் காக்க மறுத்தால், இராமனும் தண்டிக்கப்படவேண்டியவனே என்ற கருத்தை ஒவ்வொரு இடத்திலும் வலியுறுத்துகின்றனர்.

இராவணன் - காலா என்ற கரிகாலன்.  காலா என்றால், தமிழில் காப்பவன் என்கிறார்கள். மற்றோர் பொருள் எமன் - காலன். தன் மக்களுக்காகப் போராடும் இராவணன். காலாவுக்கு 4 மகன்கள். வத்திக்குச்சி திலீபன் மூத்த மகனாக, பலம் பொருந்தியவனாக, காலாவிற்குக் காவலாக. இந்திரஜித்தின் உருவகம்.

அப்போ சீதை? இரண்டு கதைகள் இருப்பதாகத் தோன்றியது எனக்கு.

சீதை - சரீனா:


இராவணன் ஆசைப்பட்டு, அடைய முடியாமல் போன காதலி சரீனா. அவர்களிருவரையும் நெருப்புப் பிரிக்கின்றது இருமுறை. இக்கதையில், சரீனாவும் காலாவைக் காதலிக்கிறாள். தனியாளாக, மகளை வளர்க்கிறாள்(சீதை லவகுச வனவாசம் போல்). ஹரிதாதா சரீனாமேல் ஆசை கொள்ளவில்லை. மாறாக, இகழ்கிறான். இஸ்லாமியப் பெயரை உச்சரிக்கும் போது காது கேட்காதது போல் நடிப்பது, காலில் விழக்கூறுவது, என மதவெறி கொண்டவன். இராவணனோ, அதாவது காலாவோ, மனைவிக்குத் துரோகமிழைக்காத நல்லவன்.
சரீனா ஆரம்பத்தில், மனுவின், தாராவி சீரமைப்புத் திட்டத்தை ஆதரிக்கிறாள். பின்பு, மேற்சொன்ன காட்சிக்கடுத்து, காலாவின் ஆதரவாளராகிறாள்.

சீதை - தாராவி:


பூமாதேவியே சீதை. சீதையாக தாராவி. தாராவிக்காகவே ஹரிதாதா, காலா யுத்தம்.

வத்திக்குச்சி திலீபன் - காலாவின் மகன் செல்வமாக மிரட்டுகிறார். வாழ்வுதான்.

ஈஸ்வரி ராவ் - காலாவின் மனைவியாக ரசித்து ரசித்து நடித்திருக்கிறார். திருநெல்வேலி மணம் செம. எல்லாக் காரியங்களிலும் காலாவிற்குத் துணையாக இருப்பதில், சரீனா வந்ததும், கணவர் அவளிடம் பேச தனிமை ஏற்படுத்திக் கொடுப்பதில், மகன்களை விட கணவனை நேசிப்பதிலும் - ரஞ்சித்தின் தேர்வு அற்புதம்.

மணிகண்டன் - காலாவில் கடைப்புதல்வன் லெனின். போராடி வெல்லவேண்டும், வன்முறை, விதிமீறலாகாது என நம்பி, காலாவை அசுர குலத் தலைவன் என அழைக்கும் பாச மகன். தந்தைக்கும் மகனுக்கும் தாராவியின் நலன் முக்கியம். வெவ்வேறு எண்ணங்களிருப்பினும், அந்த பிணைப்பு - துடிப்பான நடிப்பில் கவர்கிறார்.

புயல் சாருமதி - படத்தில் துவக்கத்திலிருந்து, யாரிந்தப் பெண் என புருவம் உயர்த்த வைக்கிறார். லெனினின் காதலியாக, தாராவியின் நலனிற்காக லெனினையும் எதிர்க்கும் பெண்ணாக, அற்புதம்.

ஹூமா குரேஷி - சரீனா. காலாவின் முன்னாள் காதலி. தேர்ந்த நடிப்பு.

நானா படேகர் - வழக்கமான வில்லன். பெரிதாகச் சொல்வதற்கொன்றும் தோன்றவில்லை.

சமுத்திரக்கனி - வாலியப்பன். காலாவின் உயிர்நாடியாக இருக்கும் நண்பன். எப்போதும் போதையில் இருந்து கொண்டே பன்ச் டயலாக்குகள் பேசுவதிலிருந்து, கடைசி வரை உடல் மொழியில் மிரட்டுகிறார்.

மேலும் பல கதாப்பாத்திரங்கள். நேர்த்தியான தேர்வு அனைத்திற்கும்.

கபாலியின் குமுதவல்லி, யோகி போல, இதில் செல்வி, சரீனா, சாருமதி. ரஞ்சித்தின் பெண்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்

செல்வியிடம் குமுதவல்லியின் சாயல். சரீனாவைப் பார்த்துவிட்டு வரும் காலாவிடம், தன் பள்ளிப் பருவத்துக் காதலனைப் பார்க்கக் கிளம்புவதாகக் கூறுவது, மகனை வெளியேற்றும் காலாவை அதட்டிவிட்டு, "போய் நல்ல இடமா இருடா" என்று சொல்லிவிட்டு வருவது.. கலக்கல்.

சரீனா காலாவின் முன்னாள் காதலியாக, தாராவிக்காக போராடும் போராளியாக, காலாவை எதிர்த்துப் பேசும் துணிச்சலான பெண்ணாக, அதே சமயம், காலாவின் உற்ற தோழியாக, ஹரி தாதாவின் காலைப் பிடிக்க வைத்ததும் வெறி கொண்டவளாக  வெளியே வரும் போதும், கண்களிலேயே பேசிவிடுகிறார்.

சாருமதி, முதல் காட்சியிலேயே எட்டி உதைப்பதாகட்டும், "எப்படி மரியாத குடுப்பது? குனிஞ்ச தல நிமிராம வரணுமா?" என நேரடியாக கேட்பதாகட்டும், எடுத்ததுமே மனதில் ஒட்டிக் கொள்கிறார். காவலர்கள் துகிலுரிக்க, தவழ்ந்து செல்லும் புயல், துணிக்கு பதிலாக அருகிலிருக்கும் இரும்புக் கம்பியை எடுத்துத் தாக்க, புரட்சிப் பெண்ணாக எழுகிறாள்.

மகன் இறந்த பின்பும், உரிமைக்காகவே குரல் கொடுக்கும் தாய்,"எங்க சுடு பாக்கலாம்" என முன்னால் வரும் பெண்கள் என வழக்கமாக ரஜினி படப் பெண்களைக் கடந்த இரு படங்களிலும் மாற்றியிருக்கும் ரஞ்திற்கு நன்றிகள்.

படத்தின் கிளைமாக்ஸ் தான் முக்கியமே.இராவணவதத்திற்குப் பின் சீதைக்கு அக்னிப் பரீட்சை அளிக்கிறான் இராமன். இங்கு, இராவணன் அக்னியில் கலக்கிறான். வெற்றியுடன் வரும் ஹரி தாதா எங்கு கண்டாலும், காலாவின் முகமே தெரிகிறது. வெள்ளையில், கருப்பு வண்ணம் வீசப்படுகிறது. கருப்பு வண்ணமில்லை. ஆனால் கருப்பில்லாமல் எந்த வண்ணங்களுமில்லை. உழைப்பின் நிறம் கருப்பு. அதனை மறுப்பது எந்த மாயாஜால வண்ணமாக இருப்பினும், அதில் கருப்பு உண்டு.சிவப்பு, நீலம் என வண்ணக் கலவைகள் கருப்புக்கு அடுத்த படியாக தெறித்து எழ, இராமவதம் நடக்கிறது.
"நான் ஒருத்தன் செத்தா என்ன? இங்க இருக்க எல்லாரும் காலா தான்" - நம்மைக் காக்கத் தனியாக யாரும் இருப்பதை விட, மாற்றம் நம் ஒவ்வொருத்தரிடமும் ஆரம்பிக்க வேண்டுமென அழுத்தமாக பிதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

இசை - பாடல்கள், பிண்ணனி இசை எதுவுமே மனதில் ஒட்டவில்லை(ஒன்றைத் தவிர). எந்தக் காட்சியிலும், பிண்ணனி இசை உணர்வுகளைத் தூண்டவில்லை. செல்வி இறக்கும் காட்சிகளில் கூட பிண்ணனி இசை எந்தவொரு உணர்ச்சியும் வெளிக்கொணரவில்லை.

அடுத்து?

தலைவர் - என்ன சொல்லவென்று தெரியவில்லை. நடிப்பின் மன்னன். அவர் இல்லாவிடில், இப்படம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருப்பு போல் காலா. பழைய ரஜினி வந்தாயிற்று. அந்த முகத்தில் தான் எத்தனை பாவங்கள்? இதற்குமேல் நான் எதுவும் கூறப்போவதில்லை. தலைவரின் நடிப்பு, பார்த்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. வார்த்தைகளால் விளக்க முடியாது.

இராமாயணம் ரீமேக் - பல பேர் பரீட்சித்துவிட்டார்கள். தாராவி -- அதெல்லாம் நாயகன் படத்திலேயே பார்த்தாயிற்று. போராட்டக் காட்சிகள் - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அப்படியேக் காண்பித்தாயிற்று.புதிதாக ஏதுமில்லையெனினும், நம்மைக் கட்டிப்போடுவது ரஜினி மட்டுமே.


கபாலியில் My Father Baliah. இதில் காலா மேசையில் "இராவண காவியம்" புத்தகம். அதுவும் 'க்யா ரே செட்டிங்கா" சண்டைக் காட்சிக்குப் பின். சரீனா வருகையில் தலைவர் படிக்கும் புத்தகத்தைச் சரியாக பார்க்கவில்லை. இறுதியில் ஒரு போர்டு.. "Singara chennai is no more a dream.. H. Jara".:-)

இப்படி, படத்தில் ஏகப்பட்ட நுணுக்கமான காட்சிகள் உள்ளனஎன் சிற்றறிவிற்கு எட்டியவை இவ்வளவே.மேலும் தோணபதிவிடுகிறேன்.

காலா - ரஜினி மற்றும் கடைசி 20 நிமிடங்களுக்காக!!!


ஆனால் காலாவா கபாலியா என்று கேட்டால், கண்டிப்பாக கபாலி தான் !!!!

No comments:

Post a Comment