Monday, April 10, 2017

காதலும் காதல் சார்ந்த இடமும்!!!

காதலும் காதல் சார்ந்த இடமும்!!!
அகத்திணை கொள்கைகளில் ஒன்று உண்டு. முன்னிலைப் புறமொழி.
தலைவி, தலைவன் (பெண், பையன் தான். ஆனால் இது தமிழின் அழகு) பழகும் முன், தலைவன் தோழியை நாடுகிறான் தங்கள் களவிற்கு. தோழி துணையோடு ஆரம்பிக்கும் உறவில், தலைவனிடம் பேச வெட்கம் கொண்ட தலைவி, தோழியிடம் கூறுவாள். தலைவன் எதிர்நின்றும் தலைவி தோழியிடம் உரையாடினாலும், சொல் தலைவனுக்கானது. முன்னிலை இருக்க புறம் பேசுவது, முன்னிலைப் புறமொழி. அகத்திணைப் பாடல்களில் உள்ள அழகியல் பலவற்றில் இதுவும் ஒன்று.
குறிஞ்சித்திணையில் குறுந்தொகைப் பாடல் ஒன்றுண்டு.

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் !!! பாறைகள், குன்றுகள் நிறைந்த இடத்தில் வாழும் தலைவி. யாரும் அறியாமல் அவளைச் சந்திக்க வந்து போகும் தலைவன். காயும் நிலவு மட்டும் சாட்சியாக. நிலவொளியில், வேங்கை மலர்கள் கொட்டிகிடக்கும் குன்று. இருளில், புலி அமர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. அங்கு அமர்ந்திருக்கும் தலைவன் தலைவி.மெளனத்தினூடே தலைவி பேச இடம் தேடுகிறாள். திருமணம் பற்றிப் பேச விழைகிறாள். முன்சொன்ன முன்னிலைப் புறமொழி வாய்ப்பு நல்குகிறது. நிலவைப் பார்க்கிறாள். ஏன் இந்த நிலவு இவ்வளவு நேரம் காய்கிறது. இந்நிலவு என்று போய், பகல் வர? இந்த களவு முடிந்து என்று நாம் மணம் புரிய?! " நீண்ட நெடிய வெண்ணிலவே !! புலி போல் இருக்கும் இப்பாறை கண்டு என் தலைவன் அஞ்சலாம்.இங்குள்ள மக்கள் எம்மைக் கண்டுவிட்டால் யாம் என்ன செய்வது? ஆக நிலவே நீ காய்வது நன்றன்று எனக்கூறி, தலைவன் களவு விடுத்து, மணம் புரிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென எடுத்துரைக்கிறாள்.
காற்று வெளியிடை - குறிஞ்சித்திணைக் காதல். வைரமுத்து குறுந்தொகை குறிஞ்சித்திணைப் பாடல்களில் எவ்வளவு சரியாக இப்பாடலைத் தழுவி, எழுதியுள்ளார் !!
முன்னிலைப் புறமொழி இங்கு தலைவனின் வாய்மொழியில்!
நிலவிடம் கதைத்து, பின் மலரிடம் உரையாடும் வரிகள் அவ்வளவு அருமை.

மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்..
மனம் கொள்ள காத்திருந்தேன்! 
மகரந்தம் தேடி நுகரும் முன்னே.. 
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்!

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

பெண்களின் பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..
முகம் தொட காத்திருந்தேன்! 
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்..
மனம் கொள்ள காத்திருந்தேன்! 

தலைவி ஏற்கெனவே நாயகனை அறிந்துள்ளாள். காதல் அல்லாத ஒரு ஈர்ப்பு (அரும்பு).

தலைவனைக்காணப்போகிறோம் என்ற ஆர்வத்தில் அரும்பு நனையாகிறது (வான் வருவான் பாடல் வரிகள் லீலா வரும் வழியில்!!)

தலைவன், தலைவி பழகும் நிலை, காதல் அல்லாத, ஒருவரை ஒருவர் ஈர்க்க வழி தேடும் நிலை, நனை முகையாகிறது.

மொக்குள். நறுமணத்தை உள்ளடக்கி வெளிவிடமுடியாமல் திணறும் நிலை. காதலை உள்ளடக்கி வெளிக்கூறவியலாத ஒரு அழகிய மூச்சுத்திணறல்!!

அடுத்த நிலை, மணம் வெளிப்பரவும் இடம்.பனிசூழ் குறிஞ்சி மலைப்பிரதேசத்தில் முகிழ்!!!

மகரந்தம் தேடி நுகரும் முன்னே.. 
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்!


இப்படி ஒவ்வொரு நிலையாகக்கடந்து, பூத்த மலர் என்ற நிலைக்கருகே வருகையில், பிணக்கு ஏற்படுகிறது. காரணம் தலைவன். வெயில் காடு என்பது தலைவன் தன்னை வஞ்சித்துச் சொல்லிக்கொள்கிறான்.

சங்ககால தலைவியிம் பாடல் முழுவதுமாகத் தலைவனிடம்!! காற்றில் மலர்களுதிர, மண்டியிடுகிறான் !!

“மலர்கொண்ட பெண்மை வாராது போனால் மலைமீது தீக்குளிப்பேன்”
“பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை”


இந்த வரிசையில் மற்றுமொரு குறிஞ்சிக்காதல் !!!

No comments:

Post a Comment