Thursday, November 28, 2019

மாற்றம் !!!???

Pratilipi link :

https://tamil.pratilipi.com/story/9qazgecyqlb0?utm_source=android&utm_campaign=content_share


1950ல் இருந்து இப்போது வரை ... என்ன மாறியிருக்கிறது ? பெரிய அளவு மாற்றத்தை விடுங்க. At least நம்ம வீட்ல, என்னென்ன மாற்றம் வந்துருக்கு ?

என்னனவோ மாறிருக்கு. என்ன மாறவே இல்ல ? நான் பாத்த மனுஷங்க, எங்க ஊர்ப்பக்கம் இருக்க பழக்கவழக்கங்கள் - இத வச்சு சொல்றேன்.

1950 - 1970கள்

எங்க அம்மா பெத்த தாத்தாவுக்கு 5 பொண்ணு. ஒரே ஒரு பையன்.மொத பொண்ணுக்கும் பையனுக்கும் வயசு வித்தியாசம் 20. அந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம் தான். ஆனா இங்க, வாரிசு வேணும்னு, கோவில் கோவிலா ஏறி, அழுது வேண்டி வரிசையா பொண்ணுங்க. சரியான மருத்துவ வசதிகள் இல்லாம, இடைல 3 குழந்தைங்க இறந்துருக்காங்க (அதுல 2 பொண்ணு, 1 பையன். ஆக மொத்தம் எட்டு). "கல(12) மக்க பெத்தாதான் பொம்பள" ங்கறது famous ஆன பழமொழி. அப்பவும் பாருங்க, பொம்பள தான். ஆம்பளைக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்ல. வாரிசு பொறந்ததும் நெறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வரதை நிறுத்திட்டாங்கன்னு அம்மா சொல்வாங்க. வாரிசு இல்லனா, சொத்தை ஆட்டையப் போட்ருவோம்னு சுத்துற கூட்டமாம் !!!

இதே மாதிரி வேற வேற version குடும்பங்கள் இருக்கு. எல்லாத்துலயும் என்னனா, பையன் தான் வாரிசு. பொண்ணுனா அடுத்த வீட்டுக்குப் போறவங்க. ஒரு படி மேல சொல்லணும்னா, பொண்ண கட்டிக் குடுக்கும் போது (ஏன்னா, பொண்ணு மாடு அல்லது அனைத்து அஃறினை மாதிரி. தவிடு புண்ணாக்கு போட்டு வளத்து அடிமாட்டுக்கு அனுப்புற கத தான்), rules இருக்கு.

1. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். (கல், புல் கூட அதுபாட்டுக்கு அமைதியா இருக்கும. குடிச்சுட்டு வந்து அடிக்காது)
2. என்ன ஆனாலும், வாழாவெட்டியா ( பேரப் பாருங்களேன். என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி வாழாம இருந்தமாதிரி) வந்துராத. உன்னக் கட்டிக் காப்பாத்த எங்களால முடியாது.
3. "எம் மக தப்புப் பண்ணா வெட்டிக்கூட போடுங்க. நான் என்னனு கேக்க மாட்டேன்". இந்த வரிகள நான் நேர்லயே கேட்ருக்கேன். அந்த தப்புங்கற list ல சோத்துல உப்பு போடாத கேஸெல்லாம் சேருமான்னு தெரியல. By the way, சோத்துல உப்பு அதிகமா போடுறான்னு அத்து விட்ட (அதாங்க divorce in கட்டப்பஞ்சாயத்து) சனம் ஒண்ணும் ஊர்ல உண்டு.
இன்னும் நெறைய ...

இப்ப நெறைய வேலைக்கு போற பெண்கள் நகர்ப்புறத்துல. படிப்புக்கு முக்கியத்துவம் அதிகமான காலம். ஆனாலும் என்ன நடந்துச்சு ? எங்க வீட்டுக் கதையவே சொல்றேன். எங்கம்மாக்கு first பொண்ணு. அப்பா வீட்டு சனம் ஒருத்தரும் வரலையாம். அந்தப் பொண்ணு கொஞ்ச நாள் ல இறக்க, அடுத்த வருஷம் நான். 30 நாள் முடிஞ்சு, பேர் வைக்கனும் ங்கற எண்ணம் கூட யாருக்கும் இல்ல. அம்மா சண்ட போட்டு, அதுக்கப்பறம் ஏதோ பேருக்கு குலுக்குச் சீட்டுப் போட பூசாரியக் கூட்டிவந்துருக்காங்க. அவ்வளவு தான். ஏன் இம்புட்டுக் கோவம்னா, எங்க பெரியப்பாவுக்கும் ஒரு பொண்ணு. அதுக்கடுத்து சித்தப்பா கல்யாணம் பண்ணி, 2 பொண்ணு. கேக்கவா வேணும்? இருக்கற எல்லா ஜோசியக்காரனையும் புடிச்சு, ஏதோ பழைய சாபம் அது இதுன்னு பரிகாரம் செஞ்சு, சித்தப்பாவுக்கு ஒரு பையன்.
ஆக, படிப்பு வாசனை அதிகமாகியும், இந்த வாரிசு பிரச்சனை ஓயல.

2000 க்கு மேல்

இப்போ இதெல்லாம் இல்ல. இந்தியா எவ்வளவோ முன்னேறிடுச்சு. அப்படின்னு தான் நானும் நம்பிட்டு இருந்தேன்.
எனக்கு first ஒரு பொண்ணு. 2வது தாய்மைன்னு தெரிஞ்சதுமே, எல்லாரும் சொன்னது....

"Wish u have a boy baby now"
"ஒரு பையனப் பெத்துப் போடு. உங்க வீட்டுக்கு மொத வாரிசு" (கணவர், வீட்டுல தலப்பிள்ள).

ஏற்கனவே ஒரு பொண்ணுங்கறதால, இப்போ ஒரு பையன் வேணும்னு சொன்னா சரி. ஆனா இந்த வாரிசு matter இன்னும் இருக்கு. இதுல advice வேற."பொண்ணு பொறந்துட்டா கவலப் படக்கூடாது. ஆண்டவன் குடுக்குறத ஏத்துக்கணும்".(அடப்பாவிங்களா... !!!)

And climax... எனக்கு ரெண்டாவது பொண்ணு :-D

இப்போ, அந்த "பையனப் பெத்துப்போடு" கும்பல் என்ன சொன்னாங்க... ?!

I am disappointed ... (பரவால்ல open ஆ சொல்லிட்டாங்க. எவ்வளவோ மேல்)

"கடவுள் ஆசி வேணும்னா ஆண் குழந்தை. அந்தக் கடவுளே வேணும்னா பெண் குழந்தை". ஒரு பொக்கைவாய் பாப்பா படம் போட்டு, Whatsapp ல ஒரு picture. (அட, அதுக்குள்ள இப்படி மாத்திட்டாய்ங்களே !!!)

" பொண்ணு தான் மகாலட்சுமி.. "(பணம் இருந்தா தான் மதிப்புன்னு design பண்ணிருக்காங்க. நன்றி)

" பொண்ணு தான் நம்மள கடசி வரக் காப்பாத்தும். பையன் பொண்டாட்டி பேச்சக் கேட்டுட்டுப் போய்டுவான்" (இந்த mentality என்ன வகைன்னே தெரில. அவரு அப்பா அம்மாவ கவனிக்கல போல.. )

இது தான் highlight ஆன comment.

நெருங்கின சொந்தம்(பெண்) .. "எனக்காக ஒண்ணு பண்ணுவியா? ரெண்டும் பொண்ணு. ரெண்டாவது பொண்ண பையன் மாதிரி வளக்கணும்.pant shirt ஆ வாங்கிக் குடு. பையன் மாதிரி தைரியமா போட்டுக்கு போடு போடற மாதிரி வளக்கணும்"
சுர்ருன்னு வந்த கோவத்துல கேட்டேன். "அது ஏன்? 2 பையன் இருக்கற வீட்டுல, பொண்ணுக்கு ஆசப்பட்டா, maximum பையனுக்கு பொண்ணு dress போட்டு போட்டோ எடுக்குறீங்க. ஏன் ஒருத்தன frock வாங்கிக் குடுத்து பொண்ணாவே(அதாவது, உங்க உலக நியதிப்படி, வளத்து, கல்யாணம்ங்கற பேர்ல, நீ வேற குடும்பம்னு சொல்லி வெளியேத்தனும்) வளக்க வேண்டியது தான ? சரி, நீங்க சொல்ற மாதிரி, எம்பொண்ண பையன் மாதிரி வளக்குறேன். கல்யாணம் பண்ணா மாப்பிள்ளை இங்க வரணும். வீட்டு வேலையெல்லாம் செய்யனும். ஏற்பாடு பண்ணுவீங்களா ?" பதிலக் காணோம். ஆக, பெண்களுக்கே, ஆண் உசத்தி, பெண் அசிங்கம் ங்கற எண்ணம் இருக்கு.

இன்னும் எத்தன வருஷத்துக்கு இப்படி? 2 பையன் இருந்தாலும் இப்போல்லாம் இதே மாதிரி "அய்யயோ" க்கள் இருக்கு. ஆனா, அதுக்கு சொல்ற காரணம் "வாரிசு" காரணம் மாதிரி வாழ்க்கை முழுசுக்கும் தொடரும் காட்டம் இல்ல.

இது உடலமைப்பு. அந்தந்தப் பிறவிக்காக முடிவானது. அவ்வளவுதான். அந்த வெளித்தோற்றத்த வச்சு, குணத்தை, பழக்கவழக்கத்தை, அந்தஸ்தை, செய்ய வேண்டிய செயல்களை, அல்லது, செய்யக் கூடாத செயல்களை முடிவு பண்ணும் வேலை இங்க யாருக்கும் இல்ல. பிறக்கற குழந்தைய நல்ல மனிதனாக வளக்கணும் அப்படிங்கற எண்ணம் மட்டும் இருந்தாப் போதும்.

பெண்களுக்கு இருக்கற தாழ்வு மனப்பான்மை, ஏற்கனெவே இருக்கற ஏற்றத்தாழ்வு, ஆணை விட உசத்தியா ஆகணும்னு நினைச்சு, எதிர்ப்பக்க ஏற்றத்தாழ்வுக்குப் போற நிலம, தற்கொலைகள், வரதட்சணை, பெண் சிசு கொலை(இப்போ இல்லைன்னுலாம் சொல்ல முடியாது. பாலின ஏற்றத்தாழ்வு இங்க இருக்கு -(நன்றி : டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் முகநூல் பதிவு) - இது எல்லாத்துக்கும் "வாரிசு" எதிர்பார்க்கும் நீங்களும் ஒரு மறைமுக/நேர் காரணம்.

பெண்களே..
ஆண்களிடமிருந்து மாற்றத்தை எதிர்பார்க்கவோ, வற்புறுத்தும் முன்போ, சிந்தியுங்கள். நீங்களும் சமம் தான். உங்களை மதியுங்கள். உங்கள் உடனிருக்கும் பெண்களை மதியுங்கள். குழந்தைகளுக்கு, சமநிலை சொல்லித்தாருங்கள். அதன்பின்பான மாற்றங்கள் தானாக நிகழும் !!!


3 comments: